search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை பட்டாசு விபத்தில் மாணவர் பலி:  5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    கோவை பட்டாசு விபத்தில் மாணவர் பலி: 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை பட்டாசு விபத்தில் மாணவர் பலியானார். மயக்கமடைந்த 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை காந்தி பூங்கா அருகே ஏ.பி.எஸ்.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் ஐ.ஏ. எஸ்.பயிற்சி மையம் செயல்படுகிறது.

    2 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மையத்தின் தரைதளத்தில் அலுவலகம் மற்றும் நூலகம், 1-வது, 2-வது தளங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்த அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.தரைத்தளத்தின் பின்புறம் குடோன் உள்ளது. இங்கு தீபாவளியையொட்டி நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதற்காக பட்டாசுகள் வாங்கி இருப்பு வைத்திருந்தனர். மேலும், நிறுவனத்திற்கு சொந்தமான மில்லுக்கு தேவையான தின்னர் உள்ளிட்ட ரசாயன பொருட்களும் இருந்தன.

    நேற்று மாலை 4 மணி அளவில் இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து கட்டிடத்தின் மேல்தளங்களுக்கும் பரவியது. இதனால் ஐ.ஏ. எஸ். பயிற்சி மாணவர்களும், ஊழியர்களும் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் அறைகள் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால் சில மாணவர்கள் வெளியே வர முடியாமல் அலறினர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து மாணவர்களை மீட்டனர். எனினும் தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலத்தில் மாணவ, மாணவிகள் 6 பேர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தீக்காயங்களுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த சக்திவேல் (வயது 22) சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ராஜபாளையத்தை சேர்ந்த மாணவிகள் காயத்ரி (26), மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி(24), திருவண்ணாமலையை சேர்ந்த அரங்கநாதன் (25), கோவை பச்சாபாளையத்தை சேர்ந்த கிரிஸ் ராஜா(23), முத்துமணிகண்ட ராஜா(26) ஆகியோருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் காயத்ரி உடல் நிலை கவலைக் கிடமாக உள்ளது. அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தரைத்தள அறைகளில் உள்ள மின்சார ஒயர்களில் மின்கசிவு ஏற்பட்டு பட்டாசுகள் இருந்த அறைக்கும் பரவியதால் பட்டாசுகள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.மாலை 4 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. இந்த விபத்தில் இரண்டு தளங்களிலும் இருந்த ஏராளமான கம்ப்யூட்டர்களிலும் தீயில் எரிந்து நாசமானது.

    இதுதொடர்பாக மாணவர் சரவணகுரு கொடுத்த புகாரின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×