search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: ஒருதலைக்காதலில் வாலிபர் வெறிச்செயல்
    X

    தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: ஒருதலைக்காதலில் வாலிபர் வெறிச்செயல்

    தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் இன்று ஆசிரியை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் நியுமென். இவரது மகள் பிரான்சினா (வயது 24). இவர் அதே பகுதியில் தூயபேதுரு மழலையர் ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு பிரான்சினா நடந்து செல்வது வழக்கம்.

    அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சீகன் என்பவர் பிரான்சினாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். இதனால் தினமும் பள்ளிக்கு செல்லும் பிரான்சினாவை அவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் தினமும் பிரார்த்தனை செய்த பின்னர் பிரான்சினா பள்ளிக்கு செல்வார். அதுவரை சீகன் ஆலயத்தின் வெளியே காத்திருப்பாராம்.

    இந்நிலையில் ஆசிரியை பிரான்சினாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். சமீபத்தில் அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவருக்கு வருகிற 8-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதனால் ஆசிரியை வேலையை விட்டுவிட பிரான்சினா முடிவு செய்தார். இதையடுத்து இன்றுடன் ஆசிரியை வேலையில் இருந்து நின்றுவிடப் போவதாக அவர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

    பிரான்சினாவிற்கு வருகிற 8-ந் தேதி திருணம் நடக்க இருப்பதையும், அவர் வேலையில் இருந்து நிற்கப்போவதையும் அறிந்த சீகன் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து இன்று காலை அரிவாளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பள்ளி அருகே சீகன் காத்திருந்தார்.

    வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பிரான்சினா பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது உள்ளே புகுந்த சீகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பிரான்சினாவின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. அவர் அலறி துடித்தபடி கீழே விழுந்தார். உடனே சீகன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    பிரான்சினாவின் அலறல் சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரான்சினாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரான்சினா சிகிச்சை பெற்று வருகிறார்.
     
    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை என்ஜினீயர் சுவாதி கொலை ஒருதலைக்காதலில் நடந்ததாக கூறப்படுகிறது. அதே போன்று நேற்று கரூரில் ஒரு தலைக்காதலால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி சோனாலியை அதே கல்லூரி முன்னாள் மாணவர் உதயகுமார் அடித்து கொலை செய்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியைக்கும் அதே காரணத்தால் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தொடரும் இந்த சம்பவங்களால் பெண்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×