search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் மாணவியை கொலை செய்த உதயகுமாரின் தாய் தலைமறைவு: உறவினர்களிடம் போலீசார் விசாரணை
    X

    கரூரில் மாணவியை கொலை செய்த உதயகுமாரின் தாய் தலைமறைவு: உறவினர்களிடம் போலீசார் விசாரணை

    கரூரில் மாணவியை கொலை செய்த மாணவர் உதயகுமாரின் தாய் தலைமறைவானார். உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    பரமக்குடி:

    மதுரை மானகிரியை சேர்ந்த மாணவி சோனாலி கரூரில் உள்ள ஒரு என்ஜீனீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அங்கு அவருடன் படித்து வந்த சக மாணவர் உதயகுமாரின் ஒரு தலை காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த அவர் நேற்று வகுப்பறைக்குள் புகுந்து சோனாலியை சரமாரியாக கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த மாணவி, மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மாணவியை கொலை செய்த உதயகுமாரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடி அருகே உள்ள ஆதியனேந்தல் ஆகும். இவரது தந்தை பெரியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் பழனியம்மாள் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கடைசி மகனான உதயகுமாருக்கு ஒரு அண்ணனும், ஒரு அக்காவும் உள்ளனர்.

    அண்ணனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அக்காவுக்கு திருமணமாகி விட்டது.

    உதயகுமார் சரியாக படிக்காமல் ஊதாரிதனமாக சுற்றி வந்துள்ளார். வீட்டிலும் அவரை கண்டிக்க ஆளில்லை என்பதால் இஷ்டம் போல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மகன், மாணவியை கொலை செய்து விட்டான் என்ற தகவல் கிடைத்ததும், பழனியம்மாள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் பரமக்குடி தாலுகா போலீசார், உதயகுமார் வீட்டின் அருகே உள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தாயையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×