search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமான காதலனுடன் தொடர்பு: தங்கையை வெட்டிக்கொன்ற தீயணைப்பு வீரர்
    X

    திருமணமான காதலனுடன் தொடர்பு: தங்கையை வெட்டிக்கொன்ற தீயணைப்பு வீரர்

    நெல்லையில் திருமணமான காதலனுடன் தொடர்பு வைத்திருந்த தங்கையை வெட்டிக்கொன்ற தீயணைப்பு வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள மேல மூன்றடைப்பை சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளி. இவரது மகன் கிருஷ்ணராஜா (வயது24), மகள் மாலா (22). மாலா பாளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கிருஷ்ணராஜா சென்னை வண்ணார்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணராஜா தனது சொந்த ஊரான மேல மூன்றடைப்பிற்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு கிருஷ்ணராஜாவுக்கும், அவரது தங்கை மாலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணராஜா தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாலாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாலா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசண்முகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தனது முன்னாள் காதலருடன், அவருக்கு திருமணமாகி விட்ட நிலையிலும் தொடர்பு வைத்திருந்ததால் தங்கை மாலாவை, கிருஷ்ணராஜா வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.

    அதன் விபரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட மாலாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது.

    பின்னர் காதல் ஜோடியின் உறவினர்கள் இருவரையும் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் பிரித்து வைக்கப்பட்டு அவரவரின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

    பின்னர் சில மாதத்தில் மாலாவின் காதலனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் மாலாவால் தனது முன்னாள் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை பார்த்த மாலா அவருடன் மீண்டும் பேசி, பழக ஆரம்பித்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை அறிந்த மாலாவின் பெற்றோர் அவரை கண்டித்தனர். திருமணமானவருடன் பழகுவதை நிறுத்தி விடு என்று கூறினர். எனினும் மாலா அந்த வாலிபருடன் தொடர்பு வைத்திருந்தார்.

    இந்நிலையில் மாலாவின் சகோதரர் கிருஷ்ணராஜா விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது தங்கை திருமணமான ஒருவருடன் பழகி வந்ததை அக்கம் பக்கத்தினர் மூலம் கேள்விபட்டார்.

    நேற்றிரவு கிருஷ்ணராஜா மாலாவிடம், ‘நீ பழகி வரும் வாலிபருடனான தொடர்பை விட்டு விடு. நான் உனக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்’ என கூறியுள்ளார். அப்போது மாலா நான் அந்த வாலிபருடனான தொடர்பை விடமாட்டேன். அவரைத்தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணராஜா, அவரை வெட்டி கொன்றுவிட்டு தலைமறைவானார்.

    தீயணைப்பு வீரர் கிருஷ்ணராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தங்கையை சகோதரரே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×