search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி
    X

    தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி

    தேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாபை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கு முன்னேறியது.
    சென்னை:

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியின் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, வலுவான பஞ்சாப்பை எதிர்கொண்டது. முதலில் சற்று தடுமாறிய தமிழக அணி பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக ஆடி பஞ்சாப்பை பதறவைத்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 88-74 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்த தமிழக அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

    மற்ற ஆட்டங்களில் கர்நாடகா அணி 78-54 என்ற புள்ளி கணக்கில் கேரளாவையும், சண்டிகார் அணி 88-28 என்ற புள்ளி கணக்கில் அருணாச்சலபிரதேசத்தையும், ராஜஸ்தான் அணி 85-71 என்ற புள்ளி கணக்கில் ஒடிசாவையும் தோற்கடித்தன.

    பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மராட்டிய அணி 73-53 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை சாய்த்தது. மற்ற ஆட்டங்களில் கர்நாடகா அணி 79-68 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தையும், இந்தியன் ரெயில்வே அணி 91-38 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானையும் வீழ்த்தின.
    Next Story
    ×