search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தூர் டி20 கிரிக்கெட் போட்டியில் நழுவிப்போன இந்தியாவின் இரு அரிய சாதனைகள்
    X

    இந்தூர் டி20 கிரிக்கெட் போட்டியில் நழுவிப்போன இந்தியாவின் இரு அரிய சாதனைகள்

    இந்தூரில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் இரண்டு அரிய சாதனைகள் கை நழுவிப்போகியுள்ளது.
    இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 260 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்ஸர் உடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 49 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 261 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த உபுல் தரங்கா, குசால் பெரேரா அதிரடியாக ரன் குவித்தனர். இருவரும் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினர். இதனால் இலங்கை அணி இலக்கை எட்டிவிடுவோ? என்ற அச்சம் இந்திய ரசிகர்களிடையெ ஒட்டிக் கொண்டது.



    இலங்கையின் ஸ்கோர் 13.2 ஓவரில் 145 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தரங்கா 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தரங்கா - குசால் பெரேரா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 109 ரன்கள் குவித்தது. அதன்பின் வந்த திசாரா பெரேரா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாக, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் பெரேரா 37 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 17.2 ஓவரில் 172 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா அவுட்டானதும் லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 89 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரால் அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்றப்பட்டார். அவர் சதம் அடிக்க 11 ரன்கள் மட்டுமே தேவையிருந்தது. 9 பந்துகள் மீதமிருந்தது. லோகுஷ் ராகுல் சதம் அடித்திருந்தால் ஒரே இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் அடித்த சாதனையை படைத்திருக்கலாம்.

    மேலும், நேற்று இந்தியா 260 ரன்கள் குவித்தது. இன்னும் 4 ரன்கள் எடுத்திருந்தால் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை பெற்றிருக்கலாம். இதற்கும் வாய்ப்பு இருந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இந்தியா 2 விக்கெட்டுக்களை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அரிய சாதனைகளை நழுவி போனது.



    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில், கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. அந்த உலக சாதனையை தகர்க்க இந்திய அணிக்கு நேற்று அருமையான வாய்ப்பு உருவானது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியாவின் வசம் இந்த சாதனை வந்திருக்கும். ஆனால் இறுதி ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 7 ரன் மட்டுமே எடுத்து சாதனையை தவறவிட்டனர்.

    இதே போல் ரோகித் சர்மா சதம் அடித்த நிலையில், லோகேஷ் ராகுலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக 19-வது ஓவரில் அவர் 89 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகிப்போனார்.

    20 ஓவர் போட்டியில் ஒரே இன்னிங்சில் இரண்டு வீரர்கள் இதுவரை சதம் அடித்தது கிடையாது. ராகுல் மேற்கொண்டு 11 ரன்கள் எடுத்திருந்தால் புதிய சரித்திரமாக அமைந்திருக்கும்.
    Next Story
    ×