search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி: தமிழக அணி வெற்றிக்கு 233 ரன்கள் நிர்ணயம்
    X

    பரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி: தமிழக அணி வெற்றிக்கு 233 ரன்கள் நிர்ணயம்

    பரோடா அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற 233 ரன்களை இலக்காக எதிரணி நிர்ணயித்துள்ளது.
    வதோதரா:

    ரஞ்சி டிராபி தொடரின் 7-வது சுற்று லீக் ஆட்டங்கள் 25-ம்தேதி தொடங்கியது. வதோதராவில் நடக்கும் சி பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி, பரோடா அணியுடன் மோதியது.

    இப்போட்டியில், டாசில் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் பரோடா 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. ஸ்வப்னில் 94 ரன்களுடனும், வகேலா 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தமிழக பந்துவீச்சில் கே.விக்னேஷ், கவுஷிக் தலா 2 விக்கெட்களும், முகமது, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    2-வது நாள் ஆட்டத்தில் ஸ்வப்னில் சதம் அடித்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய அவர் 144 ரன்களில் யோ மகேஷ் பந்தில் ஆட்டமிழந்தார். பரோடா அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தமிழ்நாடு அணி விளையாடியது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசனும், அபிநவ் முகுந்தும் களமிறங்கினர்.

    தமிழக அணியின் கவுஷிக் காந்தி (35), பாபா இந்திரஜித் (58) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது நாள் ஆட்டமுடிவில் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. அபரஜித் 59 ரன்களுடனும், ஜெகதீசன் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பரோடா அணியின் கார்த்திக் காகடே 2 விக்கெட்களும், அதித் ஷெத், லுக்மன் மெரிவாலா, துருவ் பட்டெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    தமிழக அணி 83 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அபரஜித், ஜெகதீசன் ஆகியோர் மேற்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய யோ மகேஷ் 26 ரன்கள் எடுத்தார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  சாய் கிஷோர் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பரோடா அணியின் லுக்மன் மெரிவாலா 3 விக்கெட்களும், அதித் ஷெத், ஸ்வப்னில் சிங், கார்த்திக் காகடே ஆகியோர் தலா 2 விக்கெட்களும், துருவ் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 35 ரன்கள் முன்னிலையுடன் பரோடா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கெதார் தேவ்தர், ஆதித்யா வாஹ்மோட் ஆகியோர் களமிறங்கினர். இம்முறை தமிழக வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர்.

    பரோடா அணியின் வாஹ்மோட் (7), சொலங்கி (7), தீபக் ஹூடா (8) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கெதார் தேவ்தரும் ஸ்வப்னில் சிங்கும் சற்று நிலைத்து நின்று விளையாடி ரன்கள் எடுத்தனர். கெதார் தேவ்தர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிதெஷ் பட்டேல் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து ஸ்வப்னில் சிங்குடன், அதித் ஷெத் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்வப்னில் 49 ரன்களில் அவுட் ஆனார். அதித் ஷெத் (40), கார்த்திக் காகடே (33) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பரோடா அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியின் மொஹமத், விக்னேஷ் தலா 3 விக்கெட்களும், யோ மகேஷ் 2 விக்கெட்களும், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் தமிழக அணியின் வெற்றிக்கு பரோடா அணி 233 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து தமிழக அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசனும், அபிநவ் முகுந்தும் களமிறங்கினர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் தமிழக அணி 2 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் தமிழக அணி 2 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் (1), அபிநவ் முகுந்த் (1) களத்தில் உள்ளனர்.

    இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதியுள்ள நிலையில் தமிழக அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் தேவைப்படுகிறது. நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை நடக்கிறது.
    Next Story
    ×