search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கிரிக்கெட்: நாகாலாந்து அணி 2 ரன்னில் சுருண்டு பரிதாபம்
    X

    19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கிரிக்கெட்: நாகாலாந்து அணி 2 ரன்னில் சுருண்டு பரிதாபம்

    19 வயதிற்கு உட்பட் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேரளாவிற்கு எதிரான ஆட்டத்தில் நாகாலாந்து வீராங்கனைகள் 2 ரன்னில் சுருண்டு பரிதாபத்திற்குள்ளாகினார்கள்.
    பிசிசிஐ நடத்தும் 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற போட்டியில் குரூப் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள கேரளா - நாகாலாந்து அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 17 ஓவர்கள் பேட்டிங் செய்து 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. இதில் ஒரு ரன் மட்டுமே வீராங்கனையால் அடிக்கப்பட்டது. ஒரு ரன் வைடு மூலம் கிடைத்தது.

    தொடக்க ஓவரை வீசிய அலீனா சுரேந்திரன் முதல் மூன்று ஓவர்களில் ஒரு வைடு மற்றும் ஒரு ரன் மூலம் இரண்டு ரன்கள் விட்டுக் கொடுத்தார்.



    6-வது ஓவரை பி. சவுரப்யா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தொடக்க வீராங்கனை மெங்கா 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீராங்கனைகள் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து டக்அவுட் ஆனார்கள். ஆனால் 17 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடினார்கள்.

    கேரள அணி சார்பில் கேப்டன் மின்னு மாணி 4 ஓவர்கள் வீசி ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பி. சவுரப்யா 2 விக்கெட்டும், சந்த்ரா சுரேன், பிபி செபஸ்டின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரள அணி களம் இறங்கியது. அன்சு எஸ். ராஜூ, பி.எம். ஜோஷினா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். முதல் பந்தை சந்தித்த அன்சு எஸ். ராஜூ பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 299 பந்துகள் மீதமிருந்த நிலையில் கேரள அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் போதிய அளவு கிரிக்கெட் வளர்ச்சி பெறவில்லை. தற்போதுதான் கிரிக்கெட்டிற்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×