search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
    X

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது.
    நாக்பூர்:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.




    கொல்கத்தா டெஸ்டில் மழை மற்றும் போதிய வெளிச்சம் இன்மையால் 2 நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சாதகமான முடிவு கிடைத்திருக்கும். அதில் முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்ட இந்திய அணி 2-வது இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் எழுச்சி பெற்றதுடன் வெற்றியையும் நெருங்கியது. அதே உத்வேகத்துடன் இந்த டெஸ்டிலும் இந்திய வீரர்கள் செயல்படுவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மேலும் இந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதால் வெற்றிக்கனியை பறிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

    தென்ஆப்பிரிக்க தொடரை கருத்தில் கொண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் ஆடுகளம் புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் தயார்படுத்தப்பட்டது. அது போலவே வேகப்பந்து வீச்சு கணிசமாக எடுபட்டது. உள்ளூரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத அபூர்வ நிகழ்வை அந்த டெஸ்டில் காண முடிந்தது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கும் ஏறக்குறைய அதே போன்ற ஆடுகளமே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த போட்டியிலும் முதல் 3 நாட்கள் வேகப்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    நாக்பூர் ஆடுகளத்தை இந்திய வீரர்கள் புஜாரா, ரஹானே பரிசோதிக்கும் காட்சி


    முந்தைய டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், திருமண பந்தத்தில் இணைவதால் எஞ்சிய இரு டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. இதே போல் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனிப்பட்ட காரணத்துக்காக விலகியுள்ளார். தவான் இடத்தில், முரளிவிஜய் ஆடுவார். புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அல்லது புதுமுக ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இலங்கை அணியை பொறுத்தவரை, சில மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் அடைந்த மோசமான தோல்வியுடன் ஒப்பிடும் போது கொல்கத்தா டெஸ்டில் ஓரளவு நன்றாகவே விளையாடி இருக்கிறது. அதுவே தங்களது நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாக அந்த அணி வீரர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய லாஹிரு காமகே நீக்கப்பட்டு, விஷ்வா பெர்னாண்டோ சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

    மொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவுக்கு, இலங்கை வீரர்கள் மறுபடியும் சவால் கொடுப்பார்களா? அல்லது பணிந்து போவார்களா? என்பதை காத்திருந்து ரசிப்போம்.

    இந்த மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 3-ல் இந்தியா வெற்றியும், ஒன்றில் தோல்வியும் (2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒன்றில் டிராவும் (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: எம்.விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விஜய்சங்கர் அல்லது இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

    இலங்கை: கருணாரத்னே, சமரவிக்ரமா, சன்டிமால் (கேப்டன்), திரிமன்னே, மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா, ஹெராத், சுரங்கா லக்மல், தசுன் ஷனகா, விஷ்வா பெர்னாண்டோ அல்லது தனஞ்ஜெயா டி சில்வா.

    காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×