search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்
    X

    இந்தியா - இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

    இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது.
    நாக்பூர்:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

    கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் முதல் 2 நாட்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தியது.

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் புவனேஸ்வர் குமார், முகமது மி, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் திருமணம் காரணமாக எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இடம் பெறுவார்.

    இதேபோல் சொந்த காரணத்துக்காக நாக்பூர் டெஸ்டில் இருந்து மட்டும் தொடக்க வீரர் ஷிகார் தவான் விளையாடவில்லை. இதனால் முரளி விஜய் தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.



    பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, லோகேஷ், ராகுல், புஜாரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மிடில் ஆர்டர் வரிசையில் ரகானே சோப்பிக்கவில்லை. இதனால் அவர் திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    விக்கெட் கீப்பர் சகாவும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் இடம் பெறாதது பாதிப்பு என்றாலும் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மேலும் அவர்களுக்கு குறைந்த அளவிலேயே பந்துவீச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    முதல் டெஸ்டை போலவே நாளை தொடங்கும் 2-வது டெஸ்டிலும் வேகப்பந்து ஆடுகளத்தை அமைக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஒருவர் கழற்றி விடப்பட்டால் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் இடம் பெறலாம்.

    நாக்பூர் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.

    சன்டிமால் தலைமையிலான இலங்கை அணியில் சமர விக்ரமா, கருண ரத்னே, திரிமானே, மேத்யூஸ், டிக்வெலா போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் லக்மல், ‌ஷனகா, கெம்மேஜ், ஹெராத், பெரைரா ஆகியோர் இருக்கிறார்கள். இந்த அணியும் இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் இருப்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ், ராகுல், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர்.
     
    இலங்கை: சன்டிமால் (கேப்டன்), சமரவிக்ரமா, திரிமானே, கருணரத்னே, மேத்யூஸ், டிக்வெலா, ‌ஷனகா, தில்ருவான் பெரைரா, ஹெராத், லக்மல், கேம்யேஜ், தனஜெயாடி சில்வா, விஸ்வா பெர்ணாடோ, சாண்டகன், ரோ‌ஷன் சில்வா.
    Next Story
    ×