search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி: லீக் சுற்று போட்டியில் ஜெய்ப்பூரை வீழ்த்தியது புனேரி பால்டன் அணி
    X

    புரோ கபடி: லீக் சுற்று போட்டியில் ஜெய்ப்பூரை வீழ்த்தியது புனேரி பால்டன் அணி

    புனே நகரில் நடைபெற்ற புரோ கபடி லீக் சுற்று போட்டியில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 38-15 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.

    புனே:

    ஐந்தாவது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். புனே சுற்று ஆட்டங்கள் 13-ம் தேதி தொடங்கின. 

    நேற்று (18-ம் தேதி) நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கியது முதல் இறுதிவரை புனே அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டநேர முடிவில் 38-15 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இப்போட்டியில், புனேரி பால்டன் அணி கேப்டன் தீபக் ஹூடா அதிகபட்சமாக 11 தொடுபுள்ளிகளும் எடுத்தார். 

    பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 29-29 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. பாட்னா அணியின் மோனு கொயட் அதிகபட்சமாக 10 தொடுபுள்ளிகள் எடுத்தார். 



    இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் அணி 79 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி 51 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 71 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு புல்ஸ் அணி 57 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் நீடிக்கின்றன.

    நாளை ஓய்வுதினம் எனவே போட்டிகள் நடைபெறாது. நாளை மறுநாள் நடைபெறும் லீக் போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் - புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இத்துடன் புனே சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. அடுத்த கட்டமாக புளே-ஆஃப் சுற்று போட்டிகள் வருகிற 23-ம் தேதி மும்பையில் தொடங்குகின்றன.
    Next Story
    ×