search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டி20 கிரிக்கெட்: டி.எல். விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
    X

    ராஞ்சி டி20 கிரிக்கெட்: டி.எல். விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

    ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டி.எல். விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
    ராஞ்சி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு தவான் மற்றும் சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 8 ரன்களில் புவனேஸ்வர் பந்தில்  ஸ்டம்பை பறிக்கொடுத்தார்.

    அடுத்து பிஞ்ச் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரின் மூன்றாவது பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் பிஞ்ச் குல்தீப் யாதவின் 10-வது ஓவரின் 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார். பிஞ்ச் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் சேர்த்தார்.

    பிஞ்ச் ஆட்டமிழந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே மந்தமானது. ஹென்ரிக்ஸ் 8 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பும்ரா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் பெய்ன் ஸ்டம்பை பறிகொடுத்தார். 4-வது பந்தில் கவுல்டர்-நைல் போல்டானார்.



    19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தில் கிறிஸ்டியன் ரன்அவுட் ஆனார். இந்தியா 18.4 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து மழை பெய்ததால் இத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளபட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.

    ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கவுல்டர்-நைல் வேகத்தில் போல்டானார். அடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 5.3 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. தவான் 12 பந்துகளில் 15 ரன்களுடனும், கோலி 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது டி-20 போட்டி வருகிற 10-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.
    Next Story
    ×