search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கால்பந்து இந்தியாவில் நாளை தொடக்கம்
    X

    17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கால்பந்து இந்தியாவில் நாளை தொடக்கம்

    17 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி முதல்முறையாக இந்தியாவில் நாளை தொடங்குகிறது. இதில் 24 நாடுகள் பங்கேற்கிறது.
    புதுடெல்லி:

    17 வயதுக்குட்பட்டவருக்கான உலககோப்பை கால்பந்து போட்டி 1985-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் நடந்த இந்த போட்டியில் நைஜீரியா சாம்பியன் பட்டம் பெற்றது.

    அதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 16 முறை இந்தப்போட்டி நடந்துள்ளது. கடைசியாக 2015-ம் ஆண்டு சிலியில் நடந்த போட்டியில் நைஜீரியா கோப்பையை வென்றது. 2005 வரை உலக சாம்பியன் போட்டியாகவும், அதன்பிறகு உலக கோப்பையாகவும் நடத்தப்பட்டது .

    முதல் 3 போட்டிகள் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் நடத்தப்பட்டது. 1999-ல் இருந்து 17 வயதுக்குட்பட்ட பிரிவாக மாற்றி நடத்தப்பட்டது.

    நைஜீரியா அதிகபட்சமாக 5 முறையும், பிரேசில் 3 தடவையும், கானா, மெக்சிகோ தலா 2 முறையும், கோவியர் யூனியன், சவுதி ஆரேபியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் தலா 1 தடவையும் பட்டம் பெற்றுள்ளன.

    17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை இந்தப்போட்டிகள் நடக்கிறது.

    டெல்லி, கொல்கத்தா, நவி மும்பை, கொச்சி, கவுகாத்தி, கோவா ஆகிய 6 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
    இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் தகுதி பெறும். நாக்அவுட் சுற்றுக்கு 16 அணிகள் நுழையும்.

    இந்தப்போட்டியில் பங்கேற்கும் நாடுகளும், அவை இடம் பெற்றுள்ள பிரிவுகளும் வருமாறு:-

    இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா (‘ஏ’ பிரிவு), பராகுவே, நியூசிலாந்து, துருக்கி, மாலி (பி), பிரிவில் ஜெர்மனி, ஈரான், கினியா, கோஸ்டாரிகா (சி), பிரிவில் பிரேசில், ஸ்பெயின், வடகொரியா, நைஜர் (டி), பிரான்ஸ், ஜப்பான், ஹோண்டுராஸ், நியூ கெல்டோனியா (இ), பிரிவில் இங்கிலாந்து, ஈரான், மெக்சிகோ, சிலி (எப்).

    நடப்பு சாம்பியனான நைஜீரியா இந்தபோட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

    வருகிற 14-ந்தேதி வரை ‘லீக்’ ஆட்டங்கள் நடக்கிறது. நாக்அவுட் சுற்று 16-ந்தேதி தொடங்குகிறது. 21 மற்றும் 22-ந்தேதிகளில் கால்இறுதியும், 25-ந்தேதி அரை இறுதியும், 28-ந்தேதி இறுதிப்போட்டி கொல்கத்தாவிலும் நடக்கிறது.

    நாளைய தொடக்க நாளில் 4 ஆட்டங்கள் நடக்கிறது. டெல்லியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் கொலம்பியா- கானா அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நவிமும்பையில் நடைபெறும் ஆட்டங்களில் நியூசிலாந்து- துருக்கி (மாலை 5 மணி), பராகுவே- மாலி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

    இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி நடைபெறுவதாலும், உலக கோப்பையில் முதல் தடவையாக இந்தியா விளையாடுவதாலும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் இந்தப்போட்டியை எதிர்நோக்குகின்றன.

    இந்த போட்டிகள் சோனி டென் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×