search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைப் போட்டியைக் காண ரசிகருக்கு விலையுயர்ந்த டிக்கெட்டை வழங்கிய அஸ்வின்
    X

    சென்னைப் போட்டியைக் காண ரசிகருக்கு விலையுயர்ந்த டிக்கெட்டை வழங்கிய அஸ்வின்

    சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை காண ரசிகருக்கு விலையுயர்ந்த டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் அஸ்வின்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டோனியின் ஆட்டத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மைதானம் என்பதால் டோனி, அஸ்வின் ஆகியோருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் குவிவார்கள். தற்போது அஸ்வின் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் அஸ்வினை பார்க்க முடியவில்லை.

    என்றாலும் அஸ்வினின் மானேஜ்மென்ட் அணியின் மூலம் அஸ்வின் உதவியை நாடிய ரசிகர் ஒருவருக்கு ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸ் டிக்கெட் வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார் அஸ்வின்.

    பி.வெங்கடேசன் என்ற அந்த ரசிகர், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியைக் காண விரும்பினார். தற்போது கிட்னி தொடர்பான நோயால் அவதிப்பட்டு வருகிறார். வரும் நவம்பர் மாதம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.



    இவர் அஸ்வினின் மானேஜ்மென்ட் அணியை தொடர்பு கொண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதை அந்த அணி நிர்வாகிகள் அஸ்வினிடம் தெரிவிக்க, அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால் வெங்கடேசன் அந்தப் போட்டியை ஹாஸ்பிடாலிடி பாக்ஸில் இருந்து பார்த்து ரசித்துள்ளார்.

    இதுகுறித்து வெங்கடேசன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் ‘‘நான் சேப்பாக்கம் மைதானத்தின் கேலரியில் அமர்ந்து சில போட்டிகளை பார்த்திருக்கிறேன். நான் ஹாஸ்பிடாலிடி பாக்ஸில் இருந்து போட்டியை ரசிக்க முயற்சி எடுத்த அஸ்வினின் மானேஜ்மென்ட் அணிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற சிலருக்கு இது வாழ்நாள் நிகழ்வாகும். அஸ்வினின் இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்’’ என்றார்.
    Next Story
    ×