search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை அணியின் 4 விக்கெட்களை கைப்பற்றிய அஸ்வினை பாராட்டும் சக வீரர்கள்
    X
    இலங்கை அணியின் 4 விக்கெட்களை கைப்பற்றிய அஸ்வினை பாராட்டும் சக வீரர்கள்

    இலங்கையை ஒயிட் வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி: வெளிநாட்டு மண்ணில் சாதனை

    இலங்கையுடனான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.
    பல்லேகலே:

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது.  இந்தியா முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்தது. தவான் (119 ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (108 ரன்) சதம் அடித்தனர்.

    இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டு ‘பாலோஆன்’ ஆனது. கேப்டன் சன்டிமால் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன் எடுத்து இருந்தது. கருணாரத்னே 12 ரன்னும்,
    பிஷ்பக்குமாரா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 333 ரன் தேவை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இலங்கையின் 2-வது விக்கெட் விழுந்தது. கருணாரத்னே 16 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 20 ஆக இருந்தது.

    அதனைத் தொடர்ந்து பிஷ்பக்குமாரா, குஷால் மெண்டீஸ் அடுத்தடுத்து சமி பந்தில் ஆட்டம் இழந்தனர்.

    இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை மட்டுமே
    எடுத்தது.

    சண்டிமால் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

    அந்த அணியில் அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா மட்டும் 41 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில், அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியை தொடர்ந்து, இலங்கை அணி 0-3 என்ற கணக்கில், சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

    வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×