search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஜாரா, ரகானே எங்களின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்: விராட் கோலி
    X

    புஜாரா, ரகானே எங்களின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்: விராட் கோலி

    புஜாரா மற்றும் ரகானே ஆகிய இருவர் எங்களின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் புஜாரா, ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். புஜாரா 133 ரன்களும், ரகானே 132 ரன்களும் எடுத்தனர். இவர்களின் ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்தது.

    இந்தியா வெற்றி பெற்றதும் விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘புஜாரா மற்றும் ரகானே ஆகிய இருவர் எங்களுடைய சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள். குறிப்பாக மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

    புஜாராவிற்கு நான் அதிக ஆதரவு கொடுப்பேன். ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கடினமாக பயிற்சி செய்கிறார். அதிக அளவிலான மனதளவு வலிமையுடன் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.



    புஜாரா மனதளவில் பலம் வாய்ந்த வீரர். எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இதுதான் மிகவும் முக்கியமான விஷயம். நாங்கள் எல்லோரும் விளையாடுகிறோம். ஆனால், புஜாரா ஆட்டம் அடுத்த லெவலுக்குச் சென்றுள்ளது.

    கடந்த சீசன் மற்றும் தற்போது பார்த்தீர்கள் என்றால் 1500 ரன்களை தாண்டி சென்றுள்ளார். இது மிகவும் அபாரமானது. கடின உழைப்பு மற்றும் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற அவரது நினைப்புக்கு அனைத்து புகழும் சேரும்’’ என்றார்.
    Next Story
    ×