search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றியுடன் தொடங்குமா?
    X

    டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றியுடன் தொடங்குமா?

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் நெல்லையில் இன்று மோதுகின்றன.
    நெல்லை:

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

    இதில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெய்ன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சென்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது. நெல்லையில் நேற்று நடந்த 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை தோற்கடித்தது.

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியின் 3-வது ‘லீக்’ ஆட்டம் நெல்லை ஐ.சி.எல். மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- பாபா அபராஜித் தலைமையிலான திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருவள்ளூரை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் திருவள்ளூர் அணியும் தொடக்க ஆட்டத்தில் முத்திரை பதிக்கும் வேட்கையில் உள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த அறிமுக டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்சை வீழ்த்தி இருந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

    இன்றைய ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×