search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் வெற்றிக்கு 339 ரன்கள்  இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
    X

    இந்தியாவின் வெற்றிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.
    சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், பும்ப்ரா க்ரீஸிற்கு வெளியில் கால்வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது. இதனால் பகர் சமான் 3 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    அதன்பின் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் பந்து வீச்சு எந்த வகையிலும் அச்சுறுத்தும் வகையில் இல்லை. இதனால் இருவரும் அரைசதம் நோக்கி முன்னேறினார்கள். 20-வது ஓவரில் இருவரும் அரைசதம் அடித்தனர். அசார் அலி 61 பந்தில் அரைசதமும், பகர் சமான் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

    அணியின் ஸ்கோர் 128 ரன்னாக இருக்கும்போது அசார் அலி 59 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து பகர் சமான் உடன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. பகர் சமான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 பந்தில் 114 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தார்.

    பாபர் ஆசம் 46 ரன்கள் சேர்த்தார். சோயிப் மாலிக் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு மொகமது ஹபீஸ் உடன் இமாத் வாசிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. 45-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ் உடன் 16 ரன்கள் சேர்த்தனர். 46-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 11 ரன்கள் எடுத்தனர்.

    47-வது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் அடித்தனர். 48-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 49-வது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு நோ-பால் உடன் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹபீஸ் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்தார். ஹபீஸ் 34 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    50-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் பாகிஸ்தான் 9 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. ஹபீஸ் 37 பந்தில் 57 ரன்கள் எடுத்தும், இமாத் வாசிம் 21 பந்தில் 25 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

    பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது.
    Next Story
    ×