search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்: ரிக்கிபாண்டிங் ஆதரவு
    X

    இந்திய அணிக்கு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்: ரிக்கிபாண்டிங் ஆதரவு

    இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியோடு அவரது பதவி காலம் முடிவடைகிறது.

    கும்ப்ளேயின் ஒரு ஆண்டு பதவி காலத்தை மேலும் நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. அவரது சம்பளம் மற்றும் வீரர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதால் அவர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது.

    இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரை கொண்ட 3 பேர் குழு பயிற்சியாளரை தேர்வு செய்யும். பயிற்சியாளருக்கான நேர்காணலில் கும்ப்ளேயும் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் ராகுல் டிராவிட்டிடம் இருக்கிறது. அனைத்து இளம் வீரர்களின் உத்வேகமாக அவர் இருக்கிறார். அவர் மிகவும் கவனமாக செயல்படுவார். பல்வேறு அனுபவங்களை பெற்ற மூத்த வீரர் ஆவார்.



    பயிற்சியாளர் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது நான் இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் தான். யார் பயிற்சியாளர் என்பதை முடிவு செய்யும். அது இந்தியரா? அல்லது வெளிநாட்டவரா? என்பது அவர்களது விருப்பம்.

    டிராவிட்டை போன்ற சிறந்தவர் வேறு ஒருவர் இருப்பதாக கிரிக்கெட் வாரியம் கருதும் என்று நினைக்கவில்லை. டிராவிட் பயிற்சியாளர் பதவியை விரும்பினால் அவர் அதில் சிறப்பாக செயல்படுவார்.

    கிரிக்கெட்டின் 3 நிலைகளையும் டிராவிட் நன்கு அறிந்தவர். கிரிக்கெட் பற்றிய திறனை அதிகமாக அறிந்தவர். கேப்டனின் விருப்பத்தை பொறுத்த தான் பயிற்சியாளர் தேர்வு இருக்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.



    இந்திய அணியின் ‘தடுப்புச்சுவர்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் தற்போது இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். முன்னாள் கேப்டனான அவர் ஐ.பி.எல்.லில் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
    Next Story
    ×