search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரை சந்திக்கிறார் நடால்
    X

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரை சந்திக்கிறார் நடால்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேருடன் மோத உள்ளார். கத்திக் குத்து தாக்குதலுக்குள்ளான கிவிடோவா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார்.
    பாரீஸ் :

    ஆண்டின் 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி ஒற்றையர் பிரிவில் யார்- யாருடன் மோவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தனது முதல் சுற்றில் 85-ம் நிலை வீரரான ரஷியாவின் ஆந்த்ரே குஸ்னெட்சோவுடன் மோதுகிறார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) தகுதி நிலை வீரரையும், ரபெல் நடால் (ஸ்பெயின்) பிரான்சின் பெனோய்ட் பேரையும், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மார்செல் கிரானோலர்சையும் (ஸ்பெயின்) சந்திக்கிறார்கள்.

    10-வது பட்டத்திற்கு குறி வைத்திருக்கும் களிமண் தரையின் நாயகனான ரபெல் நடால் அரைஇறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்ள வேண்டி வரலாம். ஆன்டி முர்ரே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் அவரால் முழு திறமையுடன் ஆட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது பயணம் வெற்றிகரமாக அமைந்தால் கால்இறுதியில் ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதக் கூடும்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், அனுபவம் வாய்ந்த ரஷியாவுடன் மகரோவுடன் கோதாவில் இறங்குகிறார். நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) தனது முதல் சவாலை முன்னாள் சாம்பியன் பிரான்செஸ்கா சிவோனுடன் (இத்தாலி) தொடங்குகிறார்.

    பட்டம் வெல்ல வாய்ப்புள்ள வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) முதல் சுற்றில் செப்லோவாவுடன் (சுலோவக்கியா) மோத இருக்கிறார். 2-ம் நிலை நட்சத்திரம் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சீனாவின் சாய்சாய் செங்கை சந்திக்கிறார்.


    பிரெஞ்ச் ஓபன் ‘டிரா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடப்பு சாம்பியன்கள் ஜோகோவிச் - கார்பின் முகுருஜா.

    விம்பிள்டன் மகுடத்தை இரண்டு முறை சூடியவரான செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா கடந்த டிசம்பர் மாதம் தாக்குதலுக்குள்ளானார். அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மஆசாமி கத்தியால் குத்தியதில் இடது கையில் பலத்த காயம் அடைந்தார். அதன் பிறகு தொடர்ந்து சிசிச்சை பெற்றார். அதை நினைத்து முடங்கிப்போகாமல் மனம் தளராமல் போராடிய கிவிடோவா விம்பிள்டன் டென்னிசுக்கு திரும்பும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரெஞ்ச் ஓபனில் ஆட விருப்பம் தெரிவித்தார்.

    இதையடுத்து வீரர், வீராங்கனைகள் இது போன்ற சிக்கலான சூழலை சந்திக்கும் போது பயன்படுத்தப்படும் தரவரிசை பாதுகாப்பு விதிப்படி பிரெஞ்ச் ஓபன் போட்டி தரநிலையில் அவருக்கு 15-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கத்திக் குத்து சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக களம் காண உள்ள இடக்கை ஆட்டக்காரரான கிவிடோவா முதல் சுற்றில் அமெரிக்காவின் ஜூலியா போஸ்ரப்புடன் மோத உள்ளார்.
    Next Story
    ×