search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், பி.வி.சிந்து முன்னேற்றம்
    X

    இந்தியா ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், பி.வி.சிந்து முன்னேற்றம்

    இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், சீனாவின் லீ சியா-சின் என்பவரை எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவ வீராங்கனை சாய்னா, இறுதியில் 21-10, 21-17 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சக வீராங்கனை அருந்ததியுடன் மோதினார். தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் அருந்ததியை சிந்து எளிதில் வீழ்த்தி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், களத்தில் சிந்துவுக்கு கடும் சவாலாக விளங்கிய அருந்ததி, ஒவ்வொரு சர்வீசையும் அபாரமாக முறியடித்து சிந்துவை விட ஒரு புள்ளி வித்தியாசத்திலேயே பின்தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் 17-17 என சமநிலை இருந்தது.

    அதன்பின்னர் ஆக்ரோஷமாக ஆடிய சிந்து, முதல் செட்டை 21-17 என வென்றார். அதேசமயம் இரண்டாவது செட்டில் அருந்ததியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடுத்தடுத்து புள்ளிகளைக் குவித்த சிந்து, அந்த செட்டை 21-6 என வசமாக்கி வெற்றி பெற்றார்.

    நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்று ஆட்டங்களில் சாய்னா நேவால் தாய்லாந்தின் போன்பவீ சோச்சுவாங்கையும், பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை சீனா கவாகமியையும் எதிர்கொள்கின்றனர்.
    Next Story
    ×