search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோனியின் ஆதார் அட்டை விண்ணப்பம் கசிந்தது எப்படி? மந்திரியிடம் சாக்‌ஷி புகார்
    X

    தோனியின் ஆதார் அட்டை விண்ணப்பம் கசிந்தது எப்படி? மந்திரியிடம் சாக்‌ஷி புகார்

    இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் அட்டை விண்ணப்பம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மந்திரியிடம் தோனியின் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.
    ராஞ்சி:

    கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது குடிமக்களின் தனிப்பட்ட அடையாளங்களை சேகரித்து ஓரே அடையாள அட்டையாக ஆதார் எனும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கென தனி ஆணையமும் அமைக்கப்பட்டது. தற்போது, அரசின் அனைத்து விதமான சேவைகளையும் குடிமக்கள் பெற கிட்டத்தட்ட ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை உள்ளது.

    மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ஆதார் அட்டைக்கு விண்னப்பிக்கும் குடிமக்களின் தகவல்களை பெறுவதற்கான இ-சேவை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் மகேந்திரசிங் தோனி ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். இ-சேவை மைய ஊழியர்கள் தோனியின் வீட்டுக்குச் சென்று அவரது தகவல்களை பெற்றுள்ளனர்.

    தோனி ஆதார் அட்டைக்காக தனது கைரேகையை இயந்திரத்தில் வைத்தது போல புகைப்படம் எடுத்து இ-சேவை மையத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஊழியர்கள், தோனியின் ஆதார் விண்ணப்பத்தையும் வெளிப்படையாக புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டனர். தோனியின் ரசிகர்களால் இந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீயாக பரவியது.



    இதையடுத்து, தோனியின் ஆதார் விண்ணப்பத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி ஷங்கர் பிரசாத்திடம் தோனியின் மனைவி சாக்‌ஷி டுவிட்டர் மூலமாக புகாரளித்துள்ளார்.

    மேலும், தோனியின் தனிப்பட்ட விண்ணப்பதை மத்திய மந்திரி பொது வெளியில் பகிர்ந்தது அவமானம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். மேலும், தோனிக்கு வேறு ஆதார் அட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×