search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட்: புஜாராவின் சதத்தால் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 360/6
    X

    ராஞ்சி டெஸ்ட்: புஜாராவின் சதத்தால் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 360/6

    ராஞ்சி டெஸ்டில் புஜாராவின் அபார சதத்தால் இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் குவித்துள்ளது. தற்போது வரை 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 42 ரன்னுடனும், புஜாரா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் அரைசதம் கடந்தார். புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் முரளி விஜய் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடன் களத்தில் இருந்தார். பின்னர் மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. காயம் காரணமாக பீல்டிங் செய்ய வராமல் இருந்த விராட் கோலி களம் இறங்கினார்.

    புஜாரா 155 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து ரகானே களம் இறங்கினார். அரைசதம் அடித்த பின்னர் புஜாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. புஜாரா ஒருபுறம் நிலைத்து நிற்க மறுமுனையில் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.

    ரகானே 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். புஜாரா தனது 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 13 ரன்னுடனும், புஜாரா 109 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் கருண் நாயர் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்திருந்தது.



    7-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் சகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்தியா 3-வது நாள் ஆட்டம் முடியும்வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 130 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 130 ரன்னுடனும், சகா 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை காலை இந்தியாவிற்கு முக்கியமான செஷன். மதிய உணவு இடைவேளை வரை நிலைத்து நின்றால் போட்டி சுவாரஸ்யமாக செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
    Next Story
    ×