search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் சேர்க்கப்பட்டுள்ளனர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 4-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் போட்டி கான்பூரில் 26-ந் தேதியும், 2-வது போட்டி நாக்பூரில் 29-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 1-ந் தேதியும் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியின் மாற்றம் குறித்து அணி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்திய தேர்வு குழுவினர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    34 வயதான அமித் மிஸ்ரா கடைசியாக அக்டோபர் மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்தாலும் அவருக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 27 வயதான பர்வேஸ் ரசூல் 2014-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். 20 ஓவர் போட்டி அணியில் அவர் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். சமீபத்தில் முடிந்த ரஞ்சி போட்டி தொடரில் 38 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் பர்வேஸ் ரசூலுக்கு இந்த வாய்ப்பு கிட்டி இருக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி வருமாறு:-

    லோகேஷ் ராகுல், மன்தீப்சிங், விராட்கோலி (கேப்டன்), டோனி, யுவராஜ்சிங், சுரேஷ்ரெய்னா, ரிஷாப் பான்ட், ஹர்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், யுஸ்வேந்திரா சாஹல், மனிஷ் பாண்டே, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், நெஹரா. 
    Next Story
    ×