search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் இன்று தேசிய மகளிர் ஆக்கி போட்டி: 400 வீராங்கனைகள் பங்கேற்பு
    X

    ராமநாதபுரத்தில் இன்று தேசிய மகளிர் ஆக்கி போட்டி: 400 வீராங்கனைகள் பங்கேற்பு

    ராமநாதபுரத்தில் தேசிய அளவிலான 7-வது சப்-ஜூனியர் மகளிர் ஆக்கிப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது. இதில் 400 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான 7-வது சப்-ஜூனியர் மகளிர் ஆக்கிப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலு மாணிக்கம் சர்வதேச ஆக்கி விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிக்கான தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது.

    ஆக்கி கொடியை ஏந்தியவாறு பல்வேறு மாநில அணிகளை சேர்ந்த வீராங்கனைகள் அணி வகுத்து வந்தனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜனுக்கு வீராங்கனைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்ட ஆக்கி சங்க துணைத் தலைவர் வேலு. மனோகரன், ஒலிம்பிக் விளையாட்டு வீரர் புபீந்தர் சிங், அர்ஜூனா விருது பெற்ற வி.ஜெ. பிலிப்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக, தமிழக ஆக்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றுப் பேசினார். மாநில ஆக்கி சங்க செயலாளர் ரேணுகா லட்சுமி, பொருளாளர் செந்தில் ராஜ்குமார், ராமநாதபுரம் பி.ஆர்.ஓ. அண்ணாத்துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக, தமிழகத்தின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் பங்கேற்க, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், ஜம்மு- காஷ்மீர், உத்தரகண்ட், மணிப்பூர், அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களை சேர்ந்த 400 விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். முதற் கட்டமாக பிடிவிசனில் பங்கேற்கும் 200 பேர் ராமநாதபுரம் வந்து சேர்ந்தனர்.

    இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் அசாம் மாநில அணியும், ஜம்மு- காஷ்மீர் அணியும் விளையாடின. பி பிரிவுக்கான போட்டிகள் 4-ந்தேதி முதல் 13-ந் தேதி வரையிலும், ஏ பிரிவுக்கான போட்டி 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.

    Next Story
    ×