search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன்
    X

    ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன்

    ஆசியக் கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    பெண்களுக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் நடைபெற்றது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி மிதலி ராஜ், மந்தானா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மிதலி ராஜ் ஒருபுறம் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் மந்தானா 6 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

    அதன்பின் வந்த மேகனா (9), வேத கிருஷ்ண மூர்த்தி (2), ஹர்மன் ப்ரீத் கவுர் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார். மிதலி ராஜ் 65 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து கடைசி அவுட்டாகாமல் இருக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் ஆயிஷா ஜாபர், ஜவேரியா கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆயிஷா 15 ரன்னிலும், ஜவேரியா 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    அதன்பின் வந்த அஷ்மாவியா இக்பால் 1 ரன்னிலும், நயின் அபிதி 9 ரன்னிலும், ஐரம் ஜாவேத் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஐந்தாவது நபராக களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் 26 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    7-வது வீராங்கனையாக களம் இறங்கிய நிடா டார், சானா மிர் ஆகியோர் தலா 12 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதனால் இந்திய பெண்கள் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×