search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது எடுத்த படம்.
    X
    சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது எடுத்த படம்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி அறிமுகம்

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
    சென்னை :

    8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் நாளை (சனிக்கிழமை) முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.

    கவுகாத்தியில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் 2-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, அட்லெடிகோ டீ கொல்கத்தா அணியை சந்திக்கிறது. சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது உள்ளூர் லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோசை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    ஐ.எஸ்.எல். போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. தலைமை பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி (இத்தாலி) அணி வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    அணி அறிமுகத்துக்கு பிறகு பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி அளித்த பேட்டியில், ‘மீண்டும் சென்னைக்கு திரும்பி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சென்னை ரசிகர்கள் எங்களுக்கு அமோக ஆதரவு அளித்தனர். கடந்த ஆண்டு சென்னை மக்கள் மழையால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் கோப்பையை வென்றது அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக இருந்திருக்காது. 

    ஆனாலும் நாங்கள் அவர்களுக்காக விளையாடினோம். தொடர்ந்து சென்னை அணி கோப்பையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் தான் மீண்டும் இங்கு வந்து இருக்கிறேன். மென்டோஜா, இலானோ போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருந்து விலகி இருப்பது குறித்து கவலைப்படவில்லை. இருக்கும் அணியை வைத்து சிறப்பாக செயல்படுவோம். வீரர்களின் ஒழுக்கம் முக்கியம் அல்ல, அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு தான் முன்னுரிமை அளிப்பேன். கோப்பையை தக்க வைத்து கொள்ள முழு முயற்சியையும் மேற்கொள்வோம்’ என்றார்.

    ஐ.எஸ்.எல். போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    கோல் கீப்பர்கள்: கரன்ஜித்சிங், பவன்குமார், டுவைன் கெர் (ஜமைக்கா), பின்களம்: அபிஷேக் தாஸ், மெராஜூதின் வாடூ, தனசந்திரசிங், மோகன்ராஜ், ஜெர்ரி லால்ரின்ஜூலா, எலி சபியா, ஈடெர் மான்டெய்ரோ (பிரேசில்), பெர்னட் மென்டி (பிரான்ஸ்), ஜான் அர்னே ரைஸ் (நார்வே), நடுகளம்: ரபெல் அகுஸ்டோ (பிரேசில்), ஹான்ஸ் முல்டெர் (நெதர்லாந்து), ஹர்மன்ஜோத்சிங் கப்ரா, தனபால் கணேஷ், ஜாகீர் முன்டம்பாரா, சியாம் ஹங்ஹால், பல்ஜித் சானி, தோய்சிங், அனிருத் தபா, போடோபாரிங்டா, பெடாஷோர் சிங், மானுல் பிளாசி (இத்தாலி), முன்களம்: டேவிட் சுச்சி (இத்தாலி), மவுரிஜியோ பெலுசோ (இத்தாலி), புரோசென்ஜித் சக்ரவர்த்தி, உத்தம்ராய், ஜெயேஷ் ராணே, ஜெஜெ லால்பெகுலா, டுடு ஒமாக்பெமி (நைஜீரியா). 
    Next Story
    ×