search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட மாணவி தற்கொலை
    X

    ஒடிசாவில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட மாணவி தற்கொலை

    ஒடிசா மாநிலத்தில் பள்ளி முடிந்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் கற்பழித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலம் கொராபுத் மாவட்டம் முசாகுடா என்ற கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் சீருடையில் இருந்த 4 போலீஸ்காரர்கள் அந்த மாணவியை இழுத்து சென்று கற்பழித்தனர்.

    இது சம்பந்தமாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ஆனால், அவரை கற்பழித்த போலீஸ்காரர்கள் யார்? என்பதை கடைசி வரை கண்டுபிடிக்கவில்லை. இது சம்பந்தமாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். அதிலும் குற்றவாளிகள் யார் என்பதை உறுதி செய்யவில்லை.

    இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால், காப்பாற்றப்பட்டார். இருந்த போதிலும் நேற்று மீண்டும் முயற்சி செய்த அவர், இதில் உயிர் இழந்தார்.

    நேற்று வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு துப்பட்டாவால் தூக்குமாட்டி தொங்கினார். இதுபற்றி தெரிந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு மாணவியை கீழே இறக்கினார்கள்.

    குண்டுலியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்து செல்வதற்கு வந்தனர்.

    ஆனால், பொதுமக்கள் போலீசாரை அருகில் நெருங்க விடவில்லை. இதனால் இன்னும் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

    மாணவி கற்பழிப்பு மற்றும் தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானும் மாணவி தற்கொலைக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
    Next Story
    ×