search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா: டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
    X

    கோவா: டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

    கோவாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வந்த டாக்சி டிரைவர்களின் வேலை நிறுத்த போராட்டம், முதல் மந்திரி பாரிக்கரின் உறுதி மொழியை ஏற்று இன்று வாபஸ் பெறப்பட்டது.
    பனாஜி:

    கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவி வகித்து வருகிறார்.
     
    கோவாவில் உள்ள டாக்சிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த கருவிகளை பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பொருத்த வேண்டும் என முதல் மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும், எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது.

    ஆனால், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்சி டிரைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்சிகள் ஓடாததால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

    இதற்கிடையே, டாக்சி டிரைவர்களின் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. ஆசாத் மைதானத்தில் கூடியிருந்த 1000-க்கு மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில்,  போராட்டம் நடத்திய டாக்சி டிரைவர் சங்கத்துடன் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல் மந்திரி பாரிக்கர் உறுதியளித்தார்.

    இதையடுத்து, முதல் மந்திரி அளித்த உறுதிமொழியை ஏற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக டாக்சி டிரைவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    கோவாவில் டாக்சி டிரைவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். #touristtaxioperators #strike #calledoff #tamilnews
    Next Story
    ×