search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பட்ஜெட்டில் விவசாயம், உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை: நிதின் கட்காரி
    X

    மத்திய பட்ஜெட்டில் விவசாயம், உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை: நிதின் கட்காரி

    மத்திய பட்ஜெட்டில் விவசாயம், உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
    மும்பை :

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 29-ந் தேதி தலைநகர் டெல்லியில் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு பின்னர் நாட்டின் சூழல் உண்மையிலேயே மாறிவருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது நேரடி வரிவிதிப்பு முறை 18 சதவீதம் உயர்ந்திருக்கிறது. எதிர்பார்த்தது போல் அரசின் கடன் ரூ.30 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது. நிதி பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    கடந்த காலாண்டில், வளர்ச்சி வீதம் 7 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துவிட்டது. வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை அடைவதே நமது குறிக்கோள். இதனை அடைய சற்று காலம் ஆகலாம். நமது பொருளாதாரம் பயணிக்கும் பாதையில், இந்த சாதனையை நாம் விரைவில் எட்டுவோம் என்பதை என்னால் உறுதியுடன் கூற முடியும்.

    மத்திய பட்ஜெட்டில் விவசாயம், உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு நிதி மந்திரி கூடுதல் முக்கியத்துவம் அளிப்பார். சர்வதேச அளவில் நமது பொருளாதாரம் விரைவான வளர்ச்சி அடைகிறது. நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. நமது நாட்டின் மீது சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அதீத எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.



    அரசின் பேராவல்மிக்க உள்கட்டமைப்பு திட்டங்களான சாலைகள், கடல்வழி, துறைமுகம் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டங்கள் ரூ.8 லட்சம் கோடி முதலீட்டில் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். நமது நாட்டை பொறுத்தமட்டில், உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் இன்றியமையாதது.

    உலக தரத்திலான தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு உள்கட்டமைப்புகள் நமக்கு தேவை. பாரத்மாலா திட்டத்தின்கீழ், ஏற்கனவே ரூ.7½ லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துவிட்டது. வருகிற மார்ச் மாதத்துக்குள் உள்கட்டமைப்பு பிரிவில் ரூ.8 லட்சம் கோடி நாம் முதலீடு செய்வோம்.

    இந்த ஆண்டில், பட்ஜெட்டில் சாலை திட்டங்களுக்கான நிதியை ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி இருக்கிறோம். இதனை அடுத்த ஆண்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். மராட்டியத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் நீர்ப்பாசன வசதிக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கடல் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும். கடல் விமானத்தை இயக்குவதற்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை சம்பந்தப்பட்ட துறையினர் 3 மாதத்துக்குள் வகுக்க வேண்டும்.

    இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.
    Next Story
    ×