search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் முறை செல்லாது: பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு பின்னர் புதிய மசோதா நிறைவேறியது
    X

    முத்தலாக் முறை செல்லாது: பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு பின்னர் புதிய மசோதா நிறைவேறியது

    ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ மக்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

    புதுடெல்லி:

    ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைப்பதற்கான மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்டமந்திரி ரவிஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். 

    இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என இம்மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க சார்பில் பேசிய அன்வர் ராஜா, இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து இந்த மசோதாவை மிகக்கடுமையாக எதிர்த்து பேசிய ஐதராபாத் எம்.பி ஓவைசி, இந்த மசோதா அடிப்படை உரிமைகளை மீறுகிறது மற்றும் முறையான சட்ட இணக்கம் இதில் இல்லை என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.



    உறுப்பினர்களுக்கு பதிலளித்து பேசிய ரவிஷங்கர் பிரசாத், “பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே, இந்த மசோதா. இதில், மதத்திற்கு தொடர்பில்லை” என்று கூறினார். 

    இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவுக்கு அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதங்கள் இன்று இரவு சுமார் 7.30 மணிவரை நீடித்தது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என சில உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கை குரல் வாக்கெடுப்பால் நிராகரிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் பாராளுமன்ற மேல்சபையில் இந்த மசோதா நிறைவேற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்ட பின்னர் இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.

    Next Story
    ×