search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி: பெண்ணை காரில் கடத்தி கற்பழிப்பு - 2 பேர் கைது
    X

    டெல்லி: பெண்ணை காரில் கடத்தி கற்பழிப்பு - 2 பேர் கைது

    டெல்லியில் பெண்ணை காரில் கடத்தி சென்று கற்பழித்த டிரைவர் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுடெல்லி

    டெல்லியில் 2012 டிசம்பர் மாதம் நிர்பயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

    இதனால் டெல்லியில் பெண்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனாலும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்தபடியே இருக்கிறது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    கிழக்கு டெல்லியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் குர்கானில் உள்ள மால் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இரவு 10.30 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்காக வெளியே வந்தார். அவர் அங்கிருந்து உத்தம்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று ரெயில் மூலம் டெல்லிக்கு வரவேண்டும். இதற்காக சங்கர் சவுக் நோக்கி நடந்தார்.

    டெல்லியில் கம்ப்யூட்டர் கால் சென்டர் கம்பெனிகளில் பணிக்கு சென்று திரும்புபவர்களை அழைத்து செல்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் கார்கள் அமர்த்தப்பட்டு இருக்கும்.

    பணி இல்லாத நேரத்தில் அந்த கார்கள் ஆங்காங்கே நின்று வேறு பயணிகளை குறைந்த கட்டணத்தில் ஏற்றி செல்வது வழக்கம். அப்படி ஒரு கார் அங்கே நின்று கொண்டிருந்தது. அந்த இளம்பெண் அந்த கார் டிரைவரை அணுகினார். அவர் 30 ரூபாய் கட்டணத்தில் உத்தம் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் விடுவதாக கூறினார்.

    அந்த காரில் மேலும் 2 நபர்கள் இருந்தனர். பல பயணிகளை இதே போல் ஒன்றாக ஏற்றி செல்வது வழக்கம். எனவே, அவருக்கு சந்தேகம் வரவில்லை.

    கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ராஜோகிரி என்ற இடத்தில் ஒரு பயணி இறங்கி விட்டார். டிரைவரும், மற்றொருவரும் மட்டும் இருந்தனர்.

    கார் சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென வழக்கமான பாதையில் இருந்து விலகி சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் இதுபற்றி டிரைவரிடம் கேட்டார். அதற்கு டிரைவரும், காரில் இருந்த இன்னொரு நபரும் இளம்பெண்ணை கொன்று விடுவதாக மிரட்டினார்கள்.

    பின்னர் டெல்லி- அரியானா மாநில எல்லை பகுதிக்கு காரை ஓட்டி சென்று தனிமையான ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். பின்னர் இருவரும் அவரை கற்பழித்தனர். சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். எனவே, அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

    பின்னர் அந்த பெண்ணை காரில் ஏற்றி துவாரகா செக்டார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றனர். அப்போது இரவு மணி 12.30. ரெயில் நிலையம் பூட்டப்பட்டு இருந்தது.

    உடனே அந்த பெண் தனது தோழிகளுக்கு போன் செய்து நடந்த வி‌ஷயங்களை கூறினார். அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    காரில் ஏறும் போது அந்த பெண் கார் பதிவு எண்ணை பார்த்தார் அதில் ஒரு சில எண்கள் மட்டும் ஞாபகம் இருந்தது. அது பற்றி போலீசுக்கு தெரிவித்தார்.

    அந்த எண்களை வைத்து எந்த கார் என்பதை கண்டு பிடித்தனர். கார் டிரைவரை உடனடியாக கைது செய்தார்கள். அவருடன் சேர்ந்து கற்பழித்தது அவருடைய நண்பர் என்பது தெரிய வந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

    இளம்பெண்ணுக்கு தீனதயாள் உபாத்தியாயா ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
    Next Story
    ×