search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் பா.ஜ.க. தலைவர் இன்று ஆளுநருடன் சந்திப்பு: ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுக்கிறார்
    X

    குஜராத் பா.ஜ.க. தலைவர் இன்று ஆளுநருடன் சந்திப்பு: ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுக்கிறார்

    குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ரூபானிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அடங்கிய கடிதத்துடன் பா.ஜ.க. தலைவர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார்.
    வதோதரா:

    நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதையடுத்து முதல்வரை தேர்வு செய்வதற்காக அகமதாபாத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில், சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் ரூபானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதேபோல் சட்டமன்ற கட்சி துணை தலைவராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, அவர் துணை முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது.

    முந்தைய அமைச்சரவையில் இருந்த பல மந்திரிகள் அப்படியே தொடர்வார்கள் என்றும், புதிய எம்.எல்.ஏக்களுக்கு மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.


     
    இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் ஜிதுபாய் வகானி இன்று மாலை 5.30 மணிக்கு கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது, விஜய் ரூபானி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அடங்கிய கடிதத்தை ஆளுநரிடம் வழங்க உள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

    புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க ஆளும் முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×