search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்ப்போம்: திரிணாமுல் காங்கிரஸ்
    X

    எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்ப்போம்: திரிணாமுல் காங்கிரஸ்

    எப்.ஆர்.டி.ஐ. மசோதாவினை பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கப் போவதாகவும், அதனை வாபஸ் பெறும்வரை எதிர்ப்பு தொடரும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    கொல்கத்தா:

    வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதனை சரிசெய்வதற்கு விரிவான தீர்வு வழங்குவதற்காக, நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வங்கிகள் திவாலாகிவிட்டால், வாடிக்கையாளர்கள் போட்டு வைத்துள்ள தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

    இந்த மசோதாவின் அம்சங்களை ஆராய்ந்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழு, மசோதா மீதான தனது அறிக்கையை, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதாவை திரும்ப பெறும்படி மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 

    தற்போது பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி உள்ள நிலையில், எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி இன்று நிருபர்களிடம் கூறுகையில், “எப்.ஆர்.டி.ஐ. மசோதா கொடூரமான மசோதா. அது ஒரு கருப்பு சட்டம். இந்த மசோதாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ், மாநிலம் முழுவதும் தெருத் தெருவாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும்.  பாராளுமன்றத்திலும் எதிர்ப்பு தெரிவிப்போம். மசோதாவை திரும்ப பெறும் வரையில் எதிர்ப்போம். இந்த முடிவு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது” என்றார்.
    Next Story
    ×