search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் எண் இணைப்புக்கு எதிரான வழக்குகள்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்
    X

    ஆதார் எண் இணைப்புக்கு எதிரான வழக்குகள்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

    அரசு நலத்திட்டங்களின் பலன்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை இடைக்கால தீர்ப்பினை வழங்க உள்ளது.
    புதுடெல்லி:

    வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    அதன்படி நேற்று  வெளியிட்ட அறிவிப்பில், வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற 2018 மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது. ஆனால் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக் கெடுவை நீட்டிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2018 பிப்ரவரி 6-ந்தேதி கடைசி நாள் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இன்றும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது ஆதார் இணைப்புக்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பான வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் இடைக்கால உத்தரவை நாளை பிறப்பிக்க உள்ளதாக அறிவித்தனர். 

    மேலும், ஆதார் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள பிரதான வழக்குகள் மீதான இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி 17-ம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். 

    அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை செல்போன் சேவைகளுடன் இணைப்பது கட்டாயம் என்ற காலக்கெடுவையும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார். இதனை அடுத்த விசாரணையின்போது பரிசீலனை செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×