search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் 10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை
    X

    பீகாரில் 10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை

    பீகாரில் தன்னைவிட 10 வயது மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் 15 வயதே ஆன சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    பாட்னா:

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குழந்தை திருமணத்தை ஒடுக்க சிறப்பு சட்டங்கள் இருக்கும் போதிலும், பழங்குடிகள் மற்றும் படிப்பறிவு இல்லாத கிராமப்புறங்களில் வெகு சாதாரணமாக குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான திருமணங்கள் நடக்கின்றன.

    தமிழகத்திலும் திருவண்ணாமலை உள்ளிட்ட சில பழங்குடி கிராமத்தில் இந்த திருமணங்கள் நடக்கின்றன. இந்நிலையில், பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள வினோபா நகர் கிராமத்தைச் சேர்ந்த சந்த்ரேஷ்வர் தாஸ் என்பவரின் மூத்த மகன் கடந்த 2013-ம் ஆண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    இதனையடுத்து, இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 25 வயது மருமகளை தனது இரண்டாவது மகன் மகாதேவ் தாசுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து நேற்று திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணம் ஆகி சில மணி நேரத்திலேயெ 15 வயதான மகாதேவ் தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    மூத்த மகன் விபத்தில் இறந்ததில் 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கிடைத்துள்ளதாகவும், அந்த தொகையை பெண் வீட்டார் கேட்டு நச்சரித்ததால், இரண்டாவது மகனை திருமணம் செய்து அத்தொகையை வரதட்சணையாக வைத்துக்கொள்ள திட்டமிட்டேன் என சந்த்ரேஷ்வர் தாஸ் கூறியுள்ளார்.

    அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் மகாதேவ் தாஸ் தற்கொலை மற்றும் குழந்தை திருமணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×