search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    அகமதாபாத்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக மேலும் 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை) ராகுல் காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    ராகுல் காந்தி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் 16-ந் தேதி சோனியாகாந்தி மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்கிறார். சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ராகுல்காந்தியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைப்பார்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ’காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு ராகுல் காந்தியின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்’ என  தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×