search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
    X

    விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

    டெல்லி - மும்பை விமானத்தில் இந்தி நடிகை சாயிரா வாசிமுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 39 வயது ஆசாமியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மும்பை:

    பிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட இந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம் (வயது 17). சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

    காஷ்மீரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சாயிராவின் பின் இருக்கையில் நடுத்தர வயதை சேர்ந்த ஒரு ஆண் பயணம் செய்தார். அவர், தனக்கு முன் உள்ள இருக்கையில் இருந்த சாயிராவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    முதலில் சாயிராவின் இருக்கையில் உள்ள கைப்பிடி மீது அவர் தனது காலை வைத்தார். அதற்கு சாயிரா எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர், “எனக்கு கால் வலிக்கிறது. அதனால்தான் காலை வைத்திருக்கிறேன்” என்று கூறி சமாளித்தார். சாயிராவும் அதை உண்மை என நம்பி விட்டார்.

    அவருக்கு தூக்கம் வந்தது. அரைகுறை தூக்கத்தில் இருந்தபோது, அவரது கழுத்து, தோள், பின்புறம் என ஒவ்வொன்றின் மீதும் அவர் காலை வைத்து தடவி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    ஒரு கட்டத்தில் அவரது சில்மிஷங்களை பொறுக்க முடியாமல் போன சாயிரா, அதை தனது செல்போனில் படம் பிடிக்க முயற்சித்தார். ஆனால் அப்போது அரைகுறை வெளிச்சம் என்பதால் நேர்த்தியாக படம் பிடிக்க முடியவில்லை. அரைகுறையாகத்தான் படம் எடுக்க முடிந்தது.

    அந்த விமானம் மும்பையில் தரை இறங்கும் வரை சாயிராவுக்கு இவ்வளவு நேர்ந்தும் விமான ஊழியர்கள் யாரும் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து போனார். இது தொடர்பாக அவர் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு மராட்டிய போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், மத்திய அரசும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகை சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஏர் விஸ்டாரா நிறுவனம் அளித்த தகவலை வைத்து 39 வயதான விகாஸ் சச்தேவ் என்ற தொழிலதிபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் தொல்லைக்கு ஆளான சாயிரா 18 வயது பூர்த்தியாகதவர் என்பதால் கைது செய்யப்பட்டவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×