search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் சிவப்பாக பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்
    X

    கேரளாவில் சிவப்பாக பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்

    கேரளாவில், பிறந்த குழந்தை சிவப்பாக இருந்ததால் பெற்ற தாயே கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பணை முறிகாட்டிகுறியை சேர்ந்தவர் பினு (வயது 32). இவரது மனைவி சந்தியா (28). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு சந்தியா தனது தாய் வீட்டிற்கு சென்றார். செல்லும்போது அவர் கர்ப்பமாக இருந்தார்.

    8 மாதங்களுக்கு பின்னர் பெரியோர்கள் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு பினு மனைவி வசிக்கும் அவரது தாய் வீட்டிலேயே தங்கினார். இந்நிலையில் பினு வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

    கடந்த 30-ந்தேதி இரவு சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வெளியூரில் இருக்கும் கணவரிடம் மகன் பிறந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பிரசவம் முடிந்து குழந்தையுடன் சந்தியா வீட்டுக்கு வந்தார். குழந்தை பிறந்ததில் இருந்தே சந்தியா சோகமாக இருந்தார். பெற்றோர் கேட்டத்திற்கு ஒன்றுமில்லை என்று சமாளித்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கணவருக்கு போன் செய்து குழந்தை திடீரென இறந்து விட்டது என்று கூறினார். அதிர்ச்சியடைந்த கணவர் அலறியடித்து வீட்டுக்கு வந்தார். குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    அப்போது பினுவுக்கு குழந்தையின் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து கட்டப்பணை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனில்குமார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக அறிக்கை கொடுத்தார். இதனையடுத்து தாயை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் சந்தியா கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நானும் கருப்பு, கணவரும் கருப்பு. குழந்தை மட்டும் சிவப்பாகவும், அவரது முகசாயலும் இல்லாமல் பிறந்தது. ஏற்கனவே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. கணவர் சந்தேகப்பட்டு மீண்டும் தகராறு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றேன் என்றார். இதனையடுத்து சந்தியா சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×