search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
    X

    கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

    மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
    புதுடெல்லி:

    மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.

    மத்தியில் முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக பதவி வகித்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம் மொரீசியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தந்ததாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் ஐ.என்.எஸ். மீடியாவிடம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக இங்கிலாந்து செல்ல தனக்கு அனுமதி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்த போது, வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்தை அனுமதித்தால் அவர் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று கூறி சி.பி.ஐ. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கடந்த 9-ந் தேதி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்தை அனுமதிக்கும் விவகாரத்தில் சி.பி.ஐ.யின் நிலைப்பாட்டை கேட்டு தெரிவிக்குமாறு, சி.பி.ஐ. சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை கேட்டுக்கொண்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துஷார் மேத்தா சி.பி.ஐ.யின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் குறிப்பு ஒன்றை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். கார்த்தி சிதம்பரம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் இங்கிலாந்து சென்றுவிட்டு இந்தியா திரும்பி விட வேண்டும் என்றும், இதுபற்றிய உத்தரவாதத்தை 3 நாட்களுக்குள் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

    மேலும், வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கியதை எதிர்காலத்தில் கோர்ட்டுகளில் முன்னுதாரணமாக காட்டக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள். 
    Next Story
    ×