search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதி கட்ட ஷியா பிரிவினர் விருப்பம்: சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல்
    X

    அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதி கட்ட ஷியா பிரிவினர் விருப்பம்: சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல்

    அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதி கட்ட விருப்பம் தெரிவித்து உத்தரபிரதேச ஷியா பிரிவு முஸ்லிம் வக்பு வாரியம் மற்றும் இந்து சாமியார்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
    லக்னோ:

    அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதி கட்ட விருப்பம் தெரிவித்து உத்தரபிரதேச ஷியா பிரிவு முஸ்லிம் வக்பு வாரியம் மற்றும் இந்து சாமியார்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.



    இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக்கொள்ளும் நோக்கில் உத்தரபிரதேசத்தின் ஷியா பிரிவு முஸ்லிம் வக்பு வாரியமும், இந்து அமைப்பினர் மற்றும் சாமியார்களும் இணைந்து உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர். இது தொடர்பாக 5 அம்ச பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 18-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    4 பக்கங்களை கொண்ட இந்த பரிந்துரைக்கு இந்து சாமியார்கள் மகந்த் தரம் தாஸ் (அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரர்), மகந்த் ராம்தாஸ், மகந்த் சுரேஷ் தாஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ் தாஸ் வேதாந்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த பரிந்துரைகளை வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதில் முக்கியமாக அயோத்தியில் பாபர் மசூதி தேவையில்லை என்றும், அங்கு ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. பாபர் மசூதிக்கு பதிலாக லக்னோவின் உசேனாபாத்தில் மசூதி ஒன்று கட்டி, அதற்கு மஸ்ஜித்-இ-அமான் என பெயரிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    மேலும் பாபர் மசூதியில் தங்களுக்கு உள்ள உரிமையை வக்பு வாரியம் திரும்ப பெறுகிறது எனவும், புதிய மசூதிக்கு நிலம் ஒதுக்கித்தரும்படி மாநில அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது குறித்து வசீம் ரிஸ்வி கூறுகையில், ‘அயோத்தி, கோவில்கள் நிறைந்த ஒரு பகுதி. அங்கு மசூதி தேவையில்லை. ஆனால் உசேனாபாத்தில் மசூதி கட்ட முடியும். இதற்காக 1 ஏக்கர் நிலம் நிலம் ஒதுக்குமாறு அரசை நாங்கள் கேட்டுக்கொள்வோம். பின்னர் மக்களிடம் நிதி வசூலித்து மசூதி எழுப்புவோம்’ என்றார். 
    Next Story
    ×