search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகார்: கேரள மந்திரி தாமஸ் சாண்டி ராஜினாமா?
    X

    அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகார்: கேரள மந்திரி தாமஸ் சாண்டி ராஜினாமா?

    அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் கட்சி தலைவர்கள் நெருக்கடியால் கேரள போக்குவரத்துறை மந்திரி தாமஸ்சாண்டி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தாமஸ்சாண்டி. போக்குவரத்து துறை மந்திரியாகவும் உள்ளார்.

    குட்டநாடு தொகுதியைச் சேர்ந்த இவருக்கு சொந்தமாக ரிசார்ட் உள்ளது. இதற்கு செல்ல அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக ஆலப்புழா கலெக்டர் அனுபமா விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.

    இதனை மந்திரி தாமஸ்சாண்டி மறுத்தார். ஆலப்புழா கலெக்டரின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாமஸ்சாண்டிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மந்திரியாக இருக்கும் ஒருவர், அரசு அதிகாரியை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாமா? அப்படியானால் அரசு மீது மந்திரிக்கு நம்பிக்கை இல்லையா? அவர், பதவியை ராஜினாமா செய்வதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தது.

    ஐகோர்ட்டு கண்டனத்தை தொடர்ந்து மந்திரி தாமஸ்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.



    முதல்-மந்திரி பினராயி விஜயனும் இது தொடர்பாக கூட்டணி கட்சிதலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், தாமஸ்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினர்.

    தாமஸ்சாண்டியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் சிலரும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினர்.

    இதனால் தாமஸ்சாண்டிக்கு நெருக்கடி முற்றியது. இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் மந்திரிசபை கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இக்கூட்டம் தொடங்கும் முன்பு முதல்-மந்திரி பினராயி விஜயனை, மந்திரி தாமஸ்சாண்டி சந்திக்க உள்ளார்.

    அப்போது அவர், ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரியிடம் கொடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×