search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை தேவை: டி.ஐ.ஜி. ரூபா கோரிக்கை
    X

    லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை தேவை: டி.ஐ.ஜி. ரூபா கோரிக்கை

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கியதில் லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை தேவை என்று டி.ஐ.ஜி. ரூபா கோரிக்கை விடுத்துள்ளார்.
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.

    இதுபற்றிய அறிக்கையை கடந்த ஜூலை மாதம் அவர் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர், கர்நாடக தலைமை டி.ஜி.பி., ஊழல் தடுப்பு படை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைத்தார்.

    இதனை தொடர்ந்து சிறைத்துறையில் பணியாற்றிய சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். சத்திய நாராயணராவ் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். ரூபா, டி.ஐ.ஜி. அந்தஸ்திலேயே பெங்களூரு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

    இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழுவினர் சிறையில் பணியாற்றிய அதிகாரிகள், போலீஸ்காரர்கள் மற்றும் கைதிகளிடம் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தனர்.

    அதில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை குழுவினர் எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை எனவும், அதுபற்றிய விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.



    இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறுகையில், ‘ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவினர் அரசிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனாலும் இந்த விவகாரத்தில் கைமாற்றப்பட்ட லஞ்சம் குறித்து விசாரணை நடைபெறவில்லை. ஏனென்றால் விசாரணை குழுவுக்கு அந்த அதிகாரம் இல்லை. லஞ்சம் கைமாறியது குறித்தும், சிறையில் எவ்வளவு காலம் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது என்பது குறித்தும் ஊழல் தடுப்பு படை அல்லது போலீசார் விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். 
    Next Story
    ×