search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் தேர்தல், மகாபாரத போரை போன்றது: ராகுல் காந்தி பேச்சு
    X

    குஜராத் தேர்தல், மகாபாரத போரை போன்றது: ராகுல் காந்தி பேச்சு

    குஜராத் தேர்தலை மகாபாரத போருடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, இந்த மோதலில் வாய்மையே வெல்லும் என தெரிவித்தார்.
    பார்டி:

    குஜராத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு தொடர்ந்து பேரணிகளை நடத்தி ஆதரவு திரட்டி வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று வல்சாத் மாவட்டத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    கோசங்கா பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் பார்டி நகரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகாபாரத போருக்கு முன் துரியோதனனும், அர்ஜுனனும் கிருஷ்ணரை சந்தித்தனர். அப்போது வெறும் 5 கிராமங்களை மட்டும் பாண்டவர்களுக்கு கொடுக்குமாறு துரியோதனனை கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மறுத்ததால் மகாபாரத போர் மூண்டது.

    குஜராத் தேர்தலும் மகாபாரத போரை போன்றது. இது உண்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான மோதல். கவுரவர்கள் மிகப்பெரிய படைபலம் மற்றும் ஆயுதங்களை கொண்டிருந்தனர். ஆனால் பாண்டவர்கள் பக்கம் உண்மை இருந்தது. அதைத்தவிர வேறு எதுவும் இல்லை. அதைப்போலவே எங்களிடமும் உண்மையைத்தவிர வேறேதும் இல்லை. இந்த தேர்தலில் வாய்மையே வெல்லும்.

    வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்சினைகள், தனியாரின் வசம் இருப்பதால் கல்வி மற்றும் மருத்துவத்துக்கு அதிக செலவு, ஊழல் மற்றும் நீர், நிலம் சுரண்டல் போன்றவையே குஜராத்தின் உண்மை நிலவரம் ஆகும்.

    தான் ஒரு காவலாளி என பிரதமர் மோடி எப்போதும் கூறி வருகிறார். நீங்கள் உண்மையான காவலாளி என்றால், ஜெய்ஷாவின் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு குறித்து விசாரணை நடத்துங்கள். அப்படி செய்யாவிட்டால் நீங்கள் காவலாளி அல்ல, பங்காளி ஆகும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 
    Next Story
    ×