search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த வாலிபரின் உடலை 11 மணிநேரம் வார்டில் வைத்திருந்த அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம்
    X

    இறந்த வாலிபரின் உடலை 11 மணிநேரம் வார்டில் வைத்திருந்த அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம்

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இறந்த ஒருவரின் உடலை 11 மணிநேரம் வார்டு படுக்கை அறையிலேயே வைத்திருந்த சம்பவம் மற்ற நோயாளிகளுக்கிடையே பீதியை எற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் அஸ்ரப் அலி (வயது 18). இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நண்பர்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அஸ்ரப் அலிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது நண்பர்கள் அஸ்ரப் அலியை கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஸ்ரப் அலிக்கு மூளையில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

    உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அஸ்ரப் அலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அஸ்ரப் அலி நேற்று காலை 6 மணிக்கு இறந்தார். இதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    அவர் சிகிச்சை பெற்ற 8-வது வார்டில் 80 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இறந்த அஸ்ரப் அலியின் உடலை எடுத்துச்செல்லும்படி அவரது நண்பர்களிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறினர்.

    ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து வருவதாக அவர்கள் கூறிச்சென்றனர். ஆனால் மாலை 3 மணியாகியும் அவர்கள் வரவில்லை.

    இறந்த உடல் நடுவே சிகிச்சை பெற நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்ததும் அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அஸ்ரப் அலியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தார். அப்போது வெளியே சென்ற நண்பர்கள் ஆம்புலன்சுடன் மாலை 5 மணிக்கு வந்தனர்.

    இறந்த ஒருவரின் உடல் 11 மணிநேரம் வார்டு படுக்கை அறையிலேயே கிடந்தது மற்ற நோயாளிகளை பீதியில் ஆழ்த்தியது. 80 நோயாளிகளுக்கு நடுவே பிணம் கிடந்தால் அவர்கள் எப்படி சிகிச்சை பெற முடியும். ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை 2 மணி நேரத்துக்குள் படுக்கையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மருத்துவச்சட்டம் கூறுகிறது.

    ஆனால் சட்டத்தை மீறி நோயாளிக்கு நடுவே 11 மணி நேரம் வைத்திருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் காயம் அடைந்த நெல்லையை சேர்ந்த வாலிபருக்கு இந்த ஆஸ்பத்திரி சிகிச்சை அளிக்க மறுத்தது. இதனால் அவர் அலைக்கழிக்கப்பட்டு இறந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெட்டுக்காயம் அடைந்த தமிழக வாலிபருக்கு இதே ஆஸ்பத்திரி சிகிச்சை அளிக்க மறுத்து விட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
    Next Story
    ×