search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் மகன் நிறுவனத்தில் ஊழல் என்ற கேள்விக்கே இடமில்லை: அமித்ஷா
    X

    என் மகன் நிறுவனத்தில் ஊழல் என்ற கேள்விக்கே இடமில்லை: அமித்ஷா

    தனது மகன் நடத்தும் நிறுவனத்தில் ஊழல் என்ற கேள்விக்கே இடமில்லை என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் 50 ஆயிரம் லாபம் ஈட்டி இருந்தது. ஆனால், 2015-16-ம் நிதி ஆண்டில் அந்த தொகையைவிட 16 ஆயிரம் மடங்கு லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது என தனியார் இணையதள ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது.

    இவ்விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த செய்தியை மறுத்த பா.ஜ.க சம்பந்தப்பட்ட இணையதள ஆசிரியர் மற்றும் நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என மத்திய மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட இணையதள ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது அமித்ஷா மகன் ஜெய்ஷா நேற்று முன் தினம் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முதன் முறையாக அமித்ஷா மவுனம் கலைத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது, “எனது மகன் நடத்திவரும் நிறுவனத்தில் ஊழல் என்ற கேள்விக்கே இடமில்லை. தனது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சி எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. ஆனால், எங்கேயாவது அந்த கட்சி அவதூறு வழக்கு தொடர்ந்தது உண்டா?." என்று கூறினார்.

    முன்னதாக, இவ்விவகாரத்தில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவை பதவியை விட்டு பிரதமர் நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×