search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முகுல் ராய் அறிவிப்பு
    X

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முகுல் ராய் அறிவிப்பு

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவர் முகுல் ராய், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முகுல் ராய். பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் இவர், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவிவகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார்.

    சமீப காலமாக பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுடன் முகுல் ராய் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் முகுல் ராய் விடுவிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    ஆளும்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'ஜகோ பங்களா' பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 19-ம் தேதி துர்கா பூஜையையொட்டி நடைபெற்ற பூஜையில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். முகுல் ராய் மட்டும் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில், இன்று காலை கொல்கத்தா நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த முகுல் ராய், ’கனத்த மனதுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சி தொடங்கிய ஆரம்பகாலத்தில் உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட்ட முக்கிய நபர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் கட்சியின் செயற்குழுவில் இருந்து விலகும் இந்த முடிவை மிகவும் கனத்த மனதுடன் அறிவிக்கிறேன்.

    எனது இந்த முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக துர்கா பூஜை முடிந்த பின்னர் வெளிப்படையாக தெரிவிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார். துர்கா பூஜை விழாவின்போது மக்கள் சர்ச்சைகளை விரும்புவதில்லை என்பதால் துர்கா பூஜைக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×