search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்கியா அகதிகளைப் போல் தலாய் லாமாவையும் நாடு கடத்துவீர்களா?: உமர் அப்துல்லா கேள்வி
    X

    ரோஹிங்கியா அகதிகளைப் போல் தலாய் லாமாவையும் நாடு கடத்துவீர்களா?: உமர் அப்துல்லா கேள்வி

    ரோஹிங்கியா அகதிகளைப் போல் திபெத்திய தலைவர் தலாய் லாமா மற்றும் தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவீர்களா? என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    மியான்மர் நாட்டில் இருந்து அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இவர்களில் ஒரு பிரிவினருக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா, அல்-உம்மா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இவர்களை மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

    உரிய அனுமதியின்றி தங்கள் மாநிலத்தில் தங்கியுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற தனிக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அறிவுறுத்தி இருந்தது.

    மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசை பெற்றுகொண்ட மத்திய அரசு, இந்த வழக்கில் நேற்று தனது கருத்தை தெரிவித்தது. இதுதொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்), ‘இந்தியாவின் எந்த பகுதியிலும் விருப்பம்போல் தங்கி வாழ, இந்நாட்டில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. உரிய அனுமதி இல்லாமல் அகதிகளாக வந்தவர்கள் இதற்கான உரிமையை கோர முடியாது.

    மேலும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அனுமதியின்றி இங்கு தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற அரசு தீர்மானித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரோஹிங்கியா அகதிகளைப் போல் திபெத்திய தலைவர் தலாய் லாமா மற்றும் தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவீர்களா? என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து வெளியிட்டுள்ள உமர் அப்துல்லா, ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று கூறும், இந்தியா இந்தியர்களுக்கே என்பவர்களின் கருத்து ஒருதலைபட்சமாக இல்லாத வரையில் இந்தியாவில் அடைக்கலம் அடைந்துள்ள மதிப்புக்குரிய தலாய் லாமா மற்றும் அவருடன் இங்கு தங்கியுள்ள திபெத்திய அகதிகளை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு கூறப் போகிறார்களா?

    அப்படியானால், ராஜிப் காந்தியை கொன்றதற்கு தண்டனையாக இலங்கையில் இருந்துவந்து இங்கு தங்கியுள்ள தமிழ் அகதிகளை எல்லாம் திருப்பி அனுப்பி விடுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், ரோஹிங்கியா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கருத்து தெரிவித்த மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, காஷ்மீர் முதல் மந்திரியாக நான் பதவி வகித்தவரை கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்னர் நான் பங்கேற்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மேலிட கூட்டங்களில் அப்படி ஒரு உளவுத்துறை தகவல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதில்லை.

    அப்படியொரு அச்சுறுத்தல் இருக்குமேயானால், அது 2014-க்கு பிறகு ஏற்பட்ட பின்விளைவாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×