search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுண்டிகொப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்த தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோர் வெளியே வந்த காட்சி.
    X
    சுண்டிகொப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்த தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோர் வெளியே வந்த காட்சி.

    சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க நேரில் வரமாட்டோம்: தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.

    சபாநாயகர் தனபாலிடம் விளக்கம் அளிக்க நேரில் வரும் சூழ்நிலை இல்லை என தினகரன் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    தினகரன் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்செல்வன் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி: இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பீர்களா?

    பதில்: சபாநாயகரிடம் கால அவகாசம் கேட்டு கொடுத்த மனுவுக்கு இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை. இதனால் நாங்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க நேரில் வரும் சூழ்நிலை இல்லை.

    கே: நீங்கள் விளக்கம் அளிக்காவிட்டால் 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறதே?

    ப: நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தோம்.

    பொதுச்செயலாளர் சசிகலா வழிகாட்டுதலின் பேரில் அவரை முதல்- அமைச்சர் ஆக்கினோம்.


    ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும், 10 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து கொண்டு பதவி கொடுத்திருக்கிறார்கள்.

    ஆனால் எடப்பாடியை முதல்-அமைச்சராக்கிய எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்கள்.

    தமிழக போலீசை வைத்து எங்களை மிரட்டுகிறார்கள். ஜெயலலிதாவின் வழியில் நடக்கிறவர்கள் தான் நாங்கள். சசிகலா, தினகரன் உத்தரவின்பேரில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தோம்.

    கவர்னரிடம் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் கொடுத்தோம்.

    அந்த கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை இல்லை. அதுபோல கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை. அவர்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா?

    ஆட்சியை கவிழ்க்க தயங்கமாட்டோம் என்று அண்ணன் தினகரன் கூறி இருக்கிறார். அவரது வழியில் ஆட்சியை கவிழ்க்க தயங்கமாட்டோம்.

    துரோக செயல் புரிந்ததற்காக மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கர்நாடக போலீசில் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் தமிழக போலீசாருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளனர். விசாரணைக்கு வந்தால் தங்களிடம் தகவல் தெரிவித்துவிட்டுதான் வர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    கே: தினகரன் இன்று குடகு மாவட்டத்துக்கு வந்து எம்.எல்.ஏ.க்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா?

    ப: அதுபற்றி தகவல் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×