search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோற்றுப்போன அரசியல் வாரிசு அமெரிக்காவில் நீட்டி முழக்குவதா?: ராகுல் மீது ஸ்மிரிதி இரானி பாய்ச்சல்
    X

    தோற்றுப்போன அரசியல் வாரிசு அமெரிக்காவில் நீட்டி முழக்குவதா?: ராகுல் மீது ஸ்மிரிதி இரானி பாய்ச்சல்

    இந்திய அரசியலில் தோற்றுப்போன அரசியல் வாரிசான ராகுல் காந்தி அமெரிக்காவில் வாரிசு அரசியல் பற்றி பேசுவதா? என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் 2 வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்களிடையே ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் இன்று கலந்துரையாடினார்.

    அப்போது காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் வாரிசு அரசியல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, இந்திய அரசியல் கட்சிகளில் நிலவிவரும் வாரிசு அரசியல் பற்றி அவர் குற்றம்சாட்டி பேசினார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தொடங்கி தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் வரை இந்தியாவில் நடைபெறும் அரசியல் வாரிசுகளின் தலைமையை சுட்டிக்காட்டி பேசினார்.

    இதேபோல், தொழில் துறைகளிலும் திருபாய் அம்பானியின் மகன்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானி, அமிதாப் பச்சனின் மகன்கள் அபிஷேக் பச்சன் ஆகியோர் தமது தந்தைகளின் வாரிசுகளாக இருந்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பெரும்பகுதி வாரிசுகளின் ஆதிக்கத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும், பிரதமர் மோடி மக்களை கவர்வதில் வல்லவர், என்னைப்பற்றி அவதூறான பிரசாரங்களை பரப்புவதற்கென்றே ஒரு குழுவை நியமித்துள்ளார் எனவும் ராகுல் குற்றம்சாட்டினார்.


    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு போன்றவர்களில் யாருமே அரசியல் வாரிசுகளாக இந்த பதவிகளில் அமரவில்லை. இவர்கள் அனைவருமே எளிமையான குடும்பப் பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்தான் என ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார்.

    ராகுலின் பேச்சு அவரது தோல்வியடைந்த திட்டத்தைதான் தெளிவுப்படுத்துகிறது. அரசியல் வாரிசாக வந்த தன்னை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்ட தனது அரசியல் பயணத்தின் தோல்வியைதான் அவர் அமெரிக்காவில் பேசியுள்ளார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு மந்திரியாக நான் இதை கூறவில்லை, பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்ற வகையில் குறிப்பிட்டுகிறேன்.

    வெளிநாடுகளில் நமது பிரதமரை ராகுல் இழிவுப்படுத்தி பேசுவதை கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்திய மக்களை தொடர்புகொண்டு பேச இயலாத நிலையில் வெளிநாட்டில் இதுபோல் தனது அரசியல் எதிரிகளை அவர் குறிப்பிட்டு பேசுவது சகஜமாகி விட்டது என்று ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×